ப.வேலூர்: ப.வேலூர் அருகே, மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலியானார். ப.வேலூர் அடுத்த, பொத்தனூர் தண்ணீர்பந்தல்மேடு பகுதியில், மரவள்ளி கிழங்கு அறுவடைக்காக, ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த, 14 கூலித் தொழிலாளர்கள் சென்றனர். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில் கிழங்குகளை லாரியில் அடுக்கிவிட்டு அப்பகுதியிலிருந்த விவசாய கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். ராசிபுரம் அருகே, ஒடுவன்குறிச்சியை சேர்ந்த விக்னேஸ்வரன், 31, என்ற தொழிலாளி நீச்சல் தெரியாததால் கிணற்றின் அருகிலிருந்த தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக மின் மோட்டரை இயக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். ப.வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ப.வேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE