விருதுநகர் : குண்டும் குழியுமான சகதி ரோடுகள், சாக்கடை வசதி இல்லாததால் ரோட்டில் கொட்டப்படும் கழிவுகள் என அடிப்படை வசதிகள் இன்றி கூரைக்குண்டு ஊராட்சி மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
விருதுநகர் ஒன்றியம் கூரைக்குண்டு ஊராட்சியில் செவல்பட்டி, சூலக்கரைமேடு, கூரைக்கூண்டு, குமாரசாமிராஜா நகர், கோட்டைபட்டி, அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி என 7 கிராமங்கள் உள்ளது. இங்கு அடிப்படை வசதிகள் இல்லை. தார் ரோடு அமைத்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. சூலக்கரைமேடு, அல்லம்பட்டி, கோட்டைபட்டி, முத்துராமலிங்கபுரத்தில் ரோடுகள் முற்றிலும் சேதமடைந்து விட்டது. மழை பெய்து வருவதால் மண் ரோடுகள் சகதி ரோடுகளாகி பயன்படுத்த இயலவில்லை.அல்லம்பட்டியில் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் நடக்கிறது. மக்கள் குடிநீருக்காக அலைகின்றனர். கலெக்டர் அலுவலகம், அரசு அலுவலர்கள், போலீசார் அதிகம் வசிக்கும் பகுதியான சூலக்கரைமேட்டில் சாக்கடை வசதி இல்லை. கழிவுநீர் ரோட்டிலே விடப்படுகின்றன.ஒரு சிலர் மட்டும் கழிவுநீர் தேக்கும் தொட்டி அமைத்துள்ளனர். நிலத்தடி நீர் மாசடைந்து வருவதால் ஆழ்துளை நீர் சுவை மாறி தோல் நோய்களை ஏற்படுத்துகிறது. அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE