சென்னை : ரசிகர்கள் நடத்திய கட்டுப்பாடான போராட்டத்திற்கு, நடிகர் ரஜினி பாராட்டு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், 'நான் அரசியலுக்கு வர முடியாததற்கான காரணத்தை கூறி விட்டேன்;
அதன் பிறகும் போராட்டம் நடத்தி, என்னை யாரும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்' என, தன் ரசிகர்களுக்கு, அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.உடல்நிலையை காரணம் கட்டி, அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்ட ரஜினியை, அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்து, அவரது ரசிகர்கள், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நேற்று முன்தினம் அற வழியில் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு, ரஜினி மக்கள் மன்றம் அனுமதி வழங்கவில்லை; யாரும் பங்கேற்க வேண்டாம் என, அறிவிக்கப்பட்டது. இருப்பினும், தமிழகம் முழுதும் இருந்து, ஏராளமான ரசிகர்கள் போராட்டத்திற்கு வந்திருந்தனர்.
கன்னியாகுமரி முதல் சென்னை வரை, 'ஜோதி' ஏந்தி, தொடர் ஓட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர்.இந்நிலையில், ரஜினி நேற்று விடுத்த அறிக்கை:நான் அரசியலுக்கு வராதது பற்றி, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சிலர், ரஜினி மக்கள் மன்ற பொறுப்பில் இருந்தும், மன்றத்தில் இருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் போராட்டம் நடத்தியதற்கு என் பாராட்டுகள். இருந்தாலும், தலைமையின் உத்தரவை மீறி, போராட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது.
தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காத, மக்கள் மன்றத்தினருக்கு என் மனமார்ந்த நன்றி. நான் ஏன் இப்போது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை, ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன்.தயவு செய்து இதற்கு பிறகும், நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று, யாரும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, என்னை மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என, பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு, ரஜினி கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE