மதுரை : மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழு அமைத்ததற்கு எதிரான வழக்கில், மனுதாரர்களை அக்குழுவில் இடம்பெறச் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
பாலமேடு ஜல்லிக்கட்டிற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது.மதுரை அவனியாபுரம் அன்பரசன் தாக்கல் செய்த மனு:தைப்பொங்கலையொட்டி மதுரை அவனியாபுரத்தில் ஜன.,14 ல் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்காக தென்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் கண்ணன் மற்றும் சிலரைக் கொண்ட குழுவை அமைத்து மதுரை கலெக்டர் ஜன.,6ல் உத்தரவிட்டார். கண்ணன் கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டுக்காக பெற்ற நன்கொடை, பரிசு விபரங்களுக்கு முறையாக கணக்கு சமர்ப்பிக்கவில்லை.
இது தொடர்பான சர்ச்சையால் தொடர்ந்த வழக்கு அடிப்படையில் 2019 ல் வழக்கறிஞர் கமிஷனர்களை நியமித்து, அனைத்து சமுதாய பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த இந்நீதிமன்றம் உத்தரவிட்டது. 2020 ல் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்த இந்நீதிமன்றம் உத்தரவிட்டது. இம்முறை தென்கால் பாசன விவசாயிகள் மற்றும் அவனியாபுரம் பொது மக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கலெக்டரிடம் கண்ணன் மனு அளித்தார். அவர் கிராம மக்களிடம் ஆலோசனை நடத்தாமல் ஜல்லிக்கட்டுக்கான ஆயத்தப் பணியை துவக்கினார். அரசுத் தரப்பில் நடந்த சமாதானக் கூட்டத்தில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.ஜல்லிக்கட்டுக்கு குழு அமைத்த கலெக்டரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவனியாபுரம் கிராம மக்கள் குழு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அன்பரசன் மனு செய்தார். அவனியாபுரம் சுந்தர், 'ஜனநாயக முறைப்படி அனைத்து சமுதாய பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு: மனுதாரர்கள் இறுதிக் கட்டத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு அமைதியாக நடக்க வேண்டும். ஜல்லிக்கட்டு குழுவில் மனுதாரர்கள் இடம் பெற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டை முறையாக நடத்த வங்கி கணக்கு துவக்குவது உட்பட கடந்த காலங்களில் இந்நீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு பைசல் செய்தனர்.பாலமேடு ஜல்லிக்கட்டுமதுரை மாவட்டம் பாலமேடு சந்தானம் தாக்கல் செய்த மனு:பாலமேட்டில் ஜன.,15ல் ஜல்லிக்கட்டு நடக்கிறது. கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்துக் கமிட்டி நடத்துகிறது.
இதில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை. கால்நடை வளர்ப்போர், விவசாயக் கூலிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயக நாட்டில் ஏற்புடையதல்ல. புதிதாக குழு அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு சந்தானம் குறிப்பிட்டார்.நீதிபதிகள்: ஜல்லிக்கட்டு நெருங்கிவிட்டது. மனுதாரர் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடியது ஏற்புடையதல்ல. மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE