கோவை:பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களில், ஒருவரை இரண்டு நாட்கள் சி.பி.ஐ., 'கஸ்டடி'யில் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது.கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவத்தில், எம்.பி.ஏ., பட்டதாரி திருநாவுக்கரசு, 25, சபரிராஜன், 25, சதீஷ்,28, வசந்தகுமார்,27, மணிவண்ணன்,28, ஆகியோர் 2019, பிப்ரவரியில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு, கோவை மகளிர் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.இவ்வழக்கில் கைதான ஐந்து பேருடன், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, சி.பி.ஐ., மீண்டும் விசாரணை நடத்தியது. பாதிக்கப்பட்ட மேலும், மூன்று பெண்கள் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், ஹெரன்பால்,29, பாபு,27, பொள்ளாச்சி நகர அ.தி.மு.க., மாணவரணி செயலாளர் அருளானந்தம்,34, ஆகியோர் கடந்த, 6ம் தேதி கைது செய்யப்பட்டு, கோபி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில், ஹெரன்பாலிடம், ஐந்து நாட்கள் கஸ்டடி எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, கோர்ட்டில் சி.பி.ஐ., மனு செய்தது. மகளிர் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஹெரன்பாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, இரண்டு நாட்கள் சி.பி.ஐ., கஸ்டடியில் விசாரிக்க நீதிபதி நந்தினிதேவி அனுமதி அளித்தார். அதை தொடர்ந்து, ஹெரன்பாலிடம் விசாரிக்க, பொள்ளாச்சிக்கு அழைத்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE