சிங்கம்புணரி : எஸ்.புதுார் ஒன்றியத்தில் மழை காரணமாக சில ஊரணிகள் நிறைந்துள்ள நிலையில் பல கண்மாய்களில் தண்ணீர் தேங்கவில்லை.
மாவட்டத்தின் முக்கிய விவசாயப்பகுதியான இவ்வொன்றியம் மலைத்தொடர்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. மலையில் பெய்யும் மழைநீர் கண்மாய், ஊரணிகளில் வந்து சேரும் வகையில் இயற்கையாக அமைந்த மழைநீர் கால்வாய்கள் அதிகம் உள்ளன. லேசான மழை பெய்தாலே இப்பகுதியில் உள்ள அனைத்து கண்மாய் ஊரணிகளும் நிரம்பும் வகையில் அமைப்பு இருந்தது. மாநிலத்தில் வறட்சி நிலவும் காலத்திலும் கூட இப்பகுதி மக்கள் நிறைவான அறுவடையை பெற்று வந்தனர்.
இப்பகுதியில் சில வருடங்களாக அரசு புறம்போக்கில் உள்ள கால்வாய்கள், நீர்ப்பிடிப்பு மற்றும் மேய்ச்சல் நிலங்களை பலர் வளைத்துப்போட்டு தோட்டங்களாக மாற்றி வருகின்றனர். இதனால் கால்வாய்களின் தடம் மாறி தண்ணீர் நீர்நிலைகளுக்கு வருவது தடைபட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் தொடர் மழை பெய்தும் பல கண்மாய்களில் தண்ணீர் குறைவாகவே தேங்கியுள்ளது. சில ஊரணிகளில் மட்டும் தண்ணீர் நிறைந்துள்ளது. எனவே இனி வரும் காலங்களிலாவது அனைத்து நீர்நிலைகளும் நிரம்பும் வகையில் அனைத்து வகையான ஆக்கிரமிப்புகளையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE