ஆத்தூர்: கூலமேடு ஜல்லிக்கட்டு விழாவுக்கு, காளை உரிமையாளர், மாடுபிடி வீரர்கள், கொரோனா பரிசோதனை சான்று பெற்று வர வேண்டும் என, விழா குழுவினருக்கு, வருவாய்த்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கூலமேடு கிராமத்தில் வரும், 17ல், பொங்கல் பண்டிகையொட்டி ஜல்லிக்கட்டு விழா நடக்கிறது. தற்போது, வாடிவாசல், பேரிகார்டு உள்ளிட்ட வசதிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து, வருவாய்த்துறையினர் கூறுகையில், 'ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளையுடன் வரும் காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர் இருவர், கொரோனா பரிசோதனை செய்து, தொற்று பாதிப்பு இல்லை என, மருத்துவ சான்று பெற்று வர வேண்டும். அதேபோல், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், கொரோனா பரிசோதனை செய்த சான்று பெற்றுவருவது அவசியமாகும். அவரவர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனை சான்று பெற்றுவரலாம்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE