சேலம்: ஆட்டையாம்பட்டி அருகில் சின்ன சீரகாபாடியை சேர்ந்தவர் பெருமாள், 35. இவர், கோவையில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் மனைவி முருகேஸ்வரி, சீலநாயக்கன்பட்டி பகுதியில் தனியார் நிறுவனத்தில் தையல் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். அங்கு பணிபுரிந்த, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த அருள்செல்வம், 35, என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது தெரிந்ததால், பெருமாள் தன் மனைவியை கண்டித்துள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால், பெருமாளை கொலை செய்ய அருள்செல்வம் திட்டமிட்டுள்ளார். இதன்படி, 2018, ஜன.,16ல், வீரபாண்டி ஏரி அருகில், பெருமாளை மது அருந்த அழைத்து சென்றுள்ளார். போதையில் இருந்த போது, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். உசிலம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி, 33, என்பவரை துணைக்கு அழைத்து, உடலை ஏரியில் வீசியுள்ளனர். ஆட்டையாம்பட்டி போலீசார், இருவரையும் கைது செய்தனர். இவ்வழக்கு, சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், அருள் செல்வத்துக்கு ஆயுள் சிறை, 5,000 ரூபாய் அபராதம், பால் பாண்டிக்கு மூன்று ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஆப்ரகாம் லிங்கன் தீர்ப்பளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE