அரூர்: கோபாலபுரம், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால், கரும்பு அரவை பாதிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரத்தில், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இதில், 320க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் என மொத்தம், 400க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். நேற்று பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: நடப்பாண்டு வழங்க வேண்டிய, ஈட்டிய விடுப்பு நிலுவைத்தொகை வழங்கவில்லை. வழக்கமாக வழங்கப்படும், 20 சதவீத போனஸ் தொகையில், கொரோனாவை காரணம் காட்டி, 10 சதவீதம் மட்டும் வழங்கப்பட்டது. கடந்த, 26 மாதங்களாக சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு, ஊதிய உயர்வு நிலுவையில் உள்ளது. இக்கோரிக்கைகள் நிறைவேற்றாததை கண்டித்து, உள்ளிருப்பு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். சர்க்கரை துறை ஆணையர் மற்றும் தமிழக அரசு, உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில், போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர். ஆலையில் நடப்பாண்டுக்கான, கரும்பு அரவை கடந்த, 25ல் துவங்கிய நிலையில், வேலை நிறுத்தத்தால், கரும்பு அரவை பாதித்துள்ளது. மேலும், அரவைக்கு, 120க்கும் மேற்பட்ட லாரி, டிராக்டர்களில் கொண்டு வந்த கரும்புகள், காய்ந்து கிடக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE