புதுக்கோட்டை: சென்னை, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய கண்காணிப்பாளர் பாண்டியனின், திருமயம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை, திருமயத்தைச் சேர்ந்தவர் பாண்டியன், 58; சென்னையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில், கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று வழங்க, பலரிடம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. கடந்த மாதம், லஞ்ச ஒழிப்பு போலீசார், பாண்டியனை கைது செய்தனர். தற்போது, ஜாமினில் வந்துள்ள அவர், சொந்த ஊரில் தங்கியுள்ளார். இந்நிலையில், புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., மணிகண்டன் மற்றும் சென்னை இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில், ஆறு பேர் குழு, திருமயத்தில் உள்ள பாண்டியன் வீட்டில் நேற்று காலை, 6:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரை, சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், நகைகள், வங்கிக் கணக்குகள் போன்றவற்றை பறிமுதல் செய்து, எடுத்துச் சென்றனர். சோதனைக்கு பாண்டியன் முழு ஒத்துழைப்பு அளித்ததாக, போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE