குளித்தலை: நெய்தலூர் மற்றும் முதலைப்பட்டி பகுதிகளில், தொடர் சாரல் மழையினால் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. குளித்தலை அடுத்த, தோகைமலை நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி பஞ்., சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா பயிர்கள் வயல்களில் சாய்ந்து விட்டன. அவை, மீண்டும் முளைக்கும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பல்வேறு நோய் தாக்கத்தில் இருந்து பயிர்களை காப்பாற்றி வந்த விவசாயிகள், தற்போது தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதமடைந்து வருவதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
* கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, சிந்தலவாடி, மகிளிப்பட்டி ஆகிய பகுதிகளில், 500 ஏக்கரில் நெல் சாகுபடி நடந்தது. தற்போது அறுவடை பணி துவங்கும் சமயத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பயிர்கள் சாய்ந்துள்ளன. மேலும், நெற்கதிர்கள் முதிர்ந்து தண்ணீரில் முளைத்து வருகின்றன. விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE