சென்னை : 'தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்காக ஜன.௧௯ முதல் பள்ளிகள் திறக்கப்படும்' என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பொங்கல் விடுமுறைக்கு பின் பத்தாம் வகுப்பு பிளஸ் 2 மாணவர்களுக்காக பள்ளிகளை திறப்பது குறித்து ஜன.6, 7ல் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
முதல்வர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜன. 19 முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும். ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மிகாமல் அமரவும் அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படவும் அனுமதி அளிக்கப்படுகிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்படுகிறது.மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வசதியாக வைட்டமின் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு கூறியுள்ளார்.
19 லட்சம் மாணவர்களுக்கு வைட்டமின் மாத்திரை
பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், 19 லட்சம் மாணவர்களுக்கு, வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில், வரும், 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், வைட்டமின் மாத்திரைகள் வழங்க, தமிழக முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, 10, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும், 19 லட்சம் மாணவர்களுக்கு, வைட்டமின் மாத்திரை வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவி, தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., என, அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், இந்த மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE