மதுரை:''பா.ஜ., வளர்ச்சியை பொறுக்க முடியாமல், முஸ்லிம்களை துாண்டி விட்டு, தி.மு.க., சதி செய்கிறது,'' என, தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் இப்ராஹிம் குற்றம் சாட்டினார்.
மதுரையில், அவர் கூறியதாவது:தமிழகத்தில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களால், பா.ஜ., வளர்ச்சி பெற்று வருகிறது. சட்டசபை தேர்தலில், அதிக தொகுதிகளில், பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.வெற்றி வாய்ப்புள்ள மதுரை கிழக்கு தொகுதியில், பா.ஜ., சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்ட போது, திட்டமிட்டு தி.மு.க., வினர், முஸ்லிம்களை போராட துாண்டி விட்டுள்ளனர்.
பா.ஜ., பொங்கல் விழா நடந்தது, காலை, 10:30 மணி. அது, பாங்கு நேரமும் அல்ல.குறிப்பிட்ட தெரு வழியாக செல்வது, அரசியல் சாசனத்திற்கு எதிரானதும் அல்ல. எனவே, எஸ்.டி.பி.ஐ., விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை, தி.மு.க., துாண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம், பா.ஜ., முஸ்லிம்களுக்கு எதிரானது என்பதை காட்ட, தி.மு.க., முயற்சிக்கிறது. தி.மு.க.,வின் இந்த சூழ்ச்சியை, முஸ்லிம்கள் உணர வேண்டும். சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை முஸ்லிம்கள், பா.ஜ.,வை ஆதரிக்க தயாராகி விட்டனர். அதை, எதிர்க்கட்சியினரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE