நியூயார்க்:''பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் அரசியல் ரீதியிலான ஆளுமையுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' என வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இக்கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக ஜெய்சங்கர் பங்கேற்று பேசியதாவது:
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை கண்டுபிடித்து குற்றவாளிகளை தண்டிக்கும் வசதிகள் சில நாடுகளிடம் இல்லை. வேறு சில நாடுகளிடம் அனைத்து வசதிகள் இருந்தும் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன. பயங்கரவாதத்திற்கு நிதியுதவியும் அடைக்கலமும் அளிக்கும் தவறினைச் செய்கின்றன.
இது போன்ற நாடுகளின் பயங்கரவாத ஊக்குவிப்பு செயல்களை தடுக்க வேண்டும். அதற்கு அனைத்து நாடுகளும் அரசியல் ரீதியிலான ஆளுமையுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இரட்டை நிலையை கடைபிடிக்கக் கூடாது.
பயங்கரவாதிகள் பயங்கரவாதிகள் தான். அதில் நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என பிரிக்கக் கூடாது.அப்படி கூறுவோரின் பின்னணியில் ஒரு திட்டம் இருக்கும். அவர்களின் தவறுகளை மூடி மறைக்க முயற்சிப்போரும் குற்றவாளிகள் தான்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE