புதுடில்லி: மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் அமைத்த குழு வேளாண் சட்டங்களுக்கும் அரசுக்கும் ஆதரவானது என்றும், அந்த குழுவின் முன் ஆஜராகமாட்டோம் என்றும் விவசாயிகள் சங்கத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக டில்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதித்து நேற்று (ஜன.,12) உத்தரவிட்டது. மேலும், வேளாண் சட்டங்கள் குறித்த கவலைகள், பிரச்னைகள் குறித்து தெரிவிக்கவும், சிக்கல்களைக் களையவும் 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
அந்தக் குழுவில், ‛பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபேந்தர் சிங் மான், ஷேத்கேரி சங்காதனா (மஹாராஷ்டிரா) தலைவர் அனில் கான்வாட், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையத்தின் தெற்காசிய இயக்குநர் பிரமோத் குமார் ஜோஷி, வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி,' ஆகியோரை நியமித்தது. இது குறித்து போராட்டம் நடத்தும் விவசாயிகள் சங்கத்தினர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைக்கக் கோரி விவசாயிகள் கேட்கவே இல்லை. இந்த திட்டத்துக்கு பின்னால் மத்திய அரசு இருக்கிறது.
உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் சார்பற்றவர்கள் அல்ல. வேளாண் சட்டங்களை ஆதரத்தவர்கள் தான் இந்த குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். எங்கள் போராட்டம் தொடரும். எங்கள் போராட்டத்தை திசைதிருப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது. 26-ம் தேதி டிராக்டர் பேரணி நடக்கும். உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த சட்டங்களை ரத்து செய்யட்டும். நாங்கள் எந்த குழுவின் முன்பும் ஆஜராகமாட்டோம். இந்த விவகாரத்தை பார்லி.,யில் விவாதித்து தீர்வு காணட்டும். எந்தக் குழுவும் தேவையில்லை. இந்த குழுவின் நோக்கமே போராட்டத்தைத் தணிக்கத்தான். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE