இஸ்தான்புல்: துருக்கி நாட்டை சேர்ந்த மத வழிப்பாட்டுத் தலைவருக்கு பாலியல் குற்றங்களுக்காக 1,075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
துருக்கி நாட்டை சேர்ந்தவர் அட்னான் அக்தார் (வயது 64) வழிபாட்டு பிரிவு ஒன்றின் தலைவராக இருந்த அவர், தனது தொலைக்காட்சி சேனலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட கவர்ச்சியான பெண்கள் சூழ பிரசங்கம் நடத்தி வந்தார். இதற்கு துருக்கியின் மதத் தலைவர்களிடமிருந்து கண்டனங்கள் குவிந்தது. இதன் தொடர்ச்சியாக அக்தார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. 2016ல் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாகவும் துருக்கி அரசு இவர் மீது குற்றம் சாட்டியது. இதை தொடர்ந்து 2018-ம் ஆண்டில் அக்தார் கைது செய்யப்பட்டார்.

துருக்கியின் ஊடக கண்காணிப்புக் குழு அக்தாரின் தொலைக்காட்சி சேனலுக்கு அபராதம் விதித்ததோடு, அவரது நிகழ்ச்சிகளின் ஒளிபரப்புகளுக்கு தடை விதித்தது. அவரைச் சுற்றிலும் நிற்கும் அழகிய பெண்கள் கைது செய்யப்பட்டனர். 10க்கும் மேற்பட்ட தனித்தனி குற்றச்சாட்டுகள் அக்தார் மீது சுமத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கில் துருக்கி நீதிமன்றம் அவருக்கு 1,075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது என அரசு நடத்தும் அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அக்தார். மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனக்கு ஆயிரம் தோழிகள் இருப்பதாக டிசம்பர் மாதம் அக்தார் தலைமை நீதிபதியிடம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE