கரூர்: அமராவதி ஆற்றுப்பகுதிகளில், நெல் முற்றிய நிலையில், கதிர்கள் மழையால் சாய்ந்துள்ளன. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து, சம்பா சாகுபடிக்காக கடந்த, செப்டம்பர் முதல், முறை வைத்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை, கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் யூனியன் பகுதிகளில், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் பயிர்கள் பொங்கல் பண்டிகைக்கு பிறகு, அறுவடை தொடங்கும் நிலையில், கடந்த ஒரு வாரமாக கரூர் மாவட்டத்தில், பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், அமராவதி அணை நிரம்பும் நிலையில், நாள்தோறும் வினாடிக்கு சராசரியாக, 1,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், நெல் பயிர்களில் கதிர்கள் முற்றிய நிலையில், மழையை தாக்குபிடிக்க முடியாமல், சாய்ந்த நிலையில் உள்ளது. குறிப்பாக, சின்னதாராபுரம், சின்ன ஆண்டாங்கோவில், பவித்திரம், கட்டளை, ரங்கநாதபுரம் ஆகிய பகுதிகளில், அதிகளவு மழையால் நெல் பயிர்கள் சாய்ந்துள்ளன. இதனால், சாகுபடி குறைந்து விடுமோ என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE