கரூர்: பொங்கல் திருவிழாவையொட்டி, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டில், நேற்று பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.
தமிழர்களின் முக்கிய விழாவான, பொங்கல் இன்று, போகி பண்டிகையுடன் துவங்குகிறது. நாளை நடக்கவுள்ள சூரிய பொங்கல், நாளை மறுநாள் நடக்கவுள்ள மாட்டு பொங்கல், 16ல் நடக்கவுள்ள காணும் பொங்கல் விழாக்களுக்கு, பொதுமக்கள் காய்கள், பழங்கள், மஞ்சள் கொத்து, கரும்பு, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டில் வாங்கி சென்றனர். தேங்காய் ஒரு கிலோ, 45 முதல், 50 ரூபாய் வரையிலும், மஞ்சள் கொத்து ஒரு ஜோடி, 25 ரூபாய் முதல், 30 ரூபாய் வரையிலும், வாழைப்பழம் ரகத்தை பொறுத்து ஒரு சீப், 30 ரூபாய் முதல், 60 ரூபாய் வரையிலும் விற்பனையானது. தக்காளி ஒரு கிலோ, 20 ரூபாய், வெண்டைக்காய், 35, புடலை, 16, கேரட், 40, பீர்க்கங்காய், 45, கத்தரிக்காய், 30, அவரைக்காய், 50, பச்சை மிளகாய், 30 ரூபாய்க்கு விற்றது. கரூர் ஜவஹர் பஜாரில், வீட்டு வாசலில் கோலமிட பயன்படும், கலர் பொடிகளை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். ஒரு பாக்கெட், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. போகி பண்டிகையையொட்டி, வீட்டு வாசலில் வைக்கப்படும் ஆவாரம் பூ, குலப்பூ, தும்பை பூ, வேப்பிலை ஆகியவை, ஒரு கட்டு, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் செயல்படும், வாழை மார்க்கெட்டில் பூவன் தார், 400 ரூபாய், ரஸ்தாளி மற்றும் கற்பூர வள்ளி தார், 450 ரூபாய், மொந்தன், 350 ரூபாய், செவ்வாழை, 650 ரூபாய், பச்சை நாடான், 400 ரூபாய்க்கும் ஏலம் போனது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE