லக்னோ:'கலப்பு திருமணம் செய்பவர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய 'நோட்டீசை' திருமண பதிவு அலுவலகத்தில் ஒட்டுவது கட்டாயமில்லை' என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இம்மாநில உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: முஸ்லிமாகிய நான் ஹிந்து மதத்தை சேர்ந்த ஒருவரை காதலிக்கிறேன். அவரை திருமணம் செய்து கொள்வதற்காக ஹிந்து மதத்துக்கு மாறிவிட்டேன்.என்னுடைய காதலுக்கு என் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். எங்களை வாழவிடாமல் தடுத்து வருகிறார்.
நாங்கள் பதிவுத் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம். ஆனால் சிறப்பு திருமண சட்டம் 154ன் படி கலப்பு திருமணம் செய்து கொள்பவர்கள் மாவட்ட திருமண அதிகாரியிடம் அது பற்றி மனு கொடுக்க வேண்டும். தம்பதியின் விபரம் அடங்கிய நோட்டீஸ் அலுவலக அறிவிப்பு பலகையில் பகிரங்கமாக ஒட்டப்பட்டு 30 நாட்களுக்கு பின் தான் திருமணம் செய்து கொள்ள முடியும்.
அலுவலக அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு அதை என் தந்தை அறிந்தால் திருமணத்தை தடுத்து எங்களை பிரித்து விடுவார். அதனால் நோட்டீஸ் ஒட்டுவதை கட்டாயமாக்க கூடாது.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி விவேக் சவுத்ரி வழங்கிய தீர்ப்பில் உத்தரவிட்டிருப்பதாவது: கலப்பு திருமணம் செய்து கொள்பவர்கள் பற்றிய விபரங்களை திருமண பதிவு அலுவலகத்தில் அறிவிப்பு பலகையில் வெளியிடுவதை கட்டாயமாக்க கூடாது.தங்களைப் பற்றி விபரங்களை வெளியிட வேண்டாம் என மாவட்ட திருமண பதிவு அதிகாரியிடம் எழுத்து பூர்வமாக தம்பதியினர் கேட்டுக் கொண்டால் போதுமானது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE