தேக்கடி:பெரியாறு அணையில் வெளியேறும் கசிவு நீர் சரியான அளவிலேயே உள்ளதாக அணையை நேற்று ஆய்வு செய்த மத்திய துணைக்குழு தெரிவித்தது.
மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணகுமார் தலைமையிலான மத்திய துணைக் கண்காணிப்புக்குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. இக்குழுவில் தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் பினு பேபி, உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் இருந்தனர்.
பெரியாறு மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகளை பார்வையிட்டது. மழையின் அளவு, அணைக்கு நீர்வரத்து மற்றும் தமிழகப்பகுதிக்கு வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவு குறித்து ஆய்வு நடத்தியது.
அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்களில் 2, 8, 12 ஆகிய ஷட்டர்களை இயக்கிப் பார்த்தது. அணையில் வெளியேறும் கசிவு நீர் சரியான அளவிலேயே உள்ளது என இக்குழு தெரிவித்தது. பலத்த மழை காரணமாக மாலையில் நடைபெற இருந்த ஆலோசனைக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE