சுருக்கென்று பார்வை, நிமிர்ந்த நன்னடையுடன் நடிப்பு களத்தில் யாருக்கும் அஞ்சாத துணிவோடு தில் ஆக நிற்கும் இளம் நடிகை கேப்ரெல்லா செலஸ். நவரசத்தையும் கோப்பையில் ஊற்றி குடித்தது போல் துருதுரு நடிகையாக வலம் வரும் இவர் மனம் திறந்ததாவது...
உங்களை பற்றி...
கேப்ரெல்லா செலஸ். கேபி என அழைக்கலாம். சொந்த ஊர் திருச்சி அல்லித்துறை. சினிமா, நாடகத்துறை, சமுகவலைதளங்களில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறேன்.
சினிமா ஆர்வம் எப்போது துவங்கியது
சினிமா பார்க்க துவங்கியதில் இருந்தே. பழைய படங்களில் உள்ள ரசனைகளை பார்க்கும் போது நடிப்பின் மீது அதீத ஆர்வம் ஏற்பட்டது. ஒரே விஷயத்தை நினைத்து கொண்டிருந்தால் அது நடக்கும் அல்லவா. அவ்வாறு தான் என் சினிமா பயணம் துவங்கியது.
திருச்சி டூ சென்னை எப்படி
ஆன்லைன் சேனலில் தொகுப்பாளினி, நாடகசபாவில் அங்கீகரிக்கப்பட்ட மவுன நாடக கலைஞர் போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தேன். சின்னத்திரையில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. 30க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்துள்ளேன். என்னை வைத்து இயக்கிய குறும்பட இயக்குனர்கள் சினிமாவுக்கு வந்த போது சினிமா ரீதியான நட்பும் அதிகம் கிடைத்தது. சினிமாவில் முதல் திரைப்படமாக 'கபாலி'யில் நடித்தேன். நயன்தாராவின் 'ஐரா' திரைப்படத்தில் நடித்தேன்.
கலைப்பணியில் சினிமாவை தாண்டி சமுகவலைதளங்களின் பங்கு என்ன
எனது நடிப்பு தாகம் தீராத காரணத்தால் சமுக வலைதளங்களில் களமிறங்கினேன். நான் செய்த கடுதாசிக்காரி வீடியோக்கள் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டது. நானே வசனம் எழுதி நடித்து வருகிறேன்.
கடுதாசிக்காரி என்றால்...
கடிதம் எழுதுவதை மக்கள் மறந்து விட்டனர். கடிதம் எழுதியவர்களுக்கு அதன் சுகம் தெரியும். இதை நவீன முறையில் செய்யலாம் என செய்தது தான் கடுதாசிக்காரி. தற்போது என்னை கடுதாசிக்காரி என்றே அழைக்கின்றனர்.
சினிமா வாய்ப்புகள்
'மை சன் இஸ் கே' இயக்குனர் லோகேஸ்வரனின் 'என்4' ல் நாயகியாக நடித்தேன். 'டிவி' தொடர்களில் ஒப்பந்தமாகி உள்ளேன்.
உங்கள் கனவு
'கருப்பழகி தியேட்டர் பேக்டரி' எனும் நாடக குழுவை நிறுவி அதை நிறைய கலைஞர்களின் பிறப்பிடமாக மாற்ற வேண்டும் என்பது ஆசை. அவர்களுடன் இணைந்து நானும் கற்று கொள்ள ஆசை. இதன் சிறு முயற்சியாக கொரோனா காலகட்டத்தில் 30க்கு மேற்பட்டோருக்கு ஆன்லைன் நடிப்பு பயிற்சி அளித்தேன்.
இன்ஸ்பிரேஷன்
ஆச்சி மனோரம்மா, வடிவேலு.
திறமை மிக்க இளம்பெண்ளுக்கு கூற விரும்புவது
திறமையை நம்பி வாருங்கள். அனைத்து துறைகளிலும் நல்லவர்களும், தீயவர்களும் உள்ளனர். திறமை இருந்தால் உங்களை மதித்து அடுத்த கட்டத்திற்கு கூட்டி செல்லும் பலரும் எல்லாத்துறைகளிலும் உள்ளனர். என் சினிமா பயணத்திற்கு காரணம் அம்மா மேரி கிளாரா.
கணவர் ஆகாஷ். குடும்பமே பெரிய உறுதுணையாக இருந்ததால் தான் இந்த துறையில் சாதிக்க முடிகிறது.
கேப்ரெல்லாவின் பாரம்பரிய பொங்கல்
சொந்த பந்தத்துடன் மண்பானையில் பொங்கல் கொண்டாட ஆசை. கொரோனா காலகட்டம் என்பதால் தற்போது ஒன்று கூடி செய்ய முடியாது. இருப்பினும் புத்துணர்வோடு குடும்பத்தோடு பாரம்பரிய பொங்கலை கொண்டாடுவோம்.
பொங்கல் பண்டிகையில் பிடித்தது
விவசாயிகள், கால்நடைகளுக்கு மரியாதை செய்வது. பொங்கல் பண்டிகை மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியது. போட்டி, பொறாமை இன்றி அன்பை பகிர்ந்து வாழ்வோம். அனைவரும் அன்போடு பொங்கல் கொண்டாடுவோம்.
இன்ஸ்டாகிராம் முகவரி: gabrellasellus official
வீரா...
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE