தொடுகாடு - தொடுகாடு அருகே, நெடுஞ்சாலை சேதமடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியத்திற்குட்பட்டது தொடுகாடு ஊராட்சி. மணவாள நகர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ஊராட்சி வழியே, டூ - வீலர், கார், அரசு, தனியார், தொழிற்சாலை பஸ், கனரக வாகனங்கள் என, தினமும், 8,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நெடுஞ்சாலையில், தொடுகாடு, செங்காடு, போளிவாக்கம், மேல்நல்லாத்துார் உள்ளிட்ட பல பகுதிகளில், நெடுஞ்சாலை சேதம்அடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்து, மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இதனால், ஐந்து ஆண்டுகளாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, டூ - வீலர்களில் செல்வோர் கடும் சிரமத்துக்குள்ளாகி, அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.இவ்வாறு, மோசமான நிலையில் உள்ள சாலைகளைகூட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சீரமைக்காமல் அலட்சியம் காட்டுவது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தினர், நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE