புதுடில்லி: வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவில் இருந்து ஒருவர் விலகியுள்ள நிலையில், மற்ற மூவரையும் மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை எதிர்த்தும் சட்டங்களை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் மூன்று வேளாண் சட்டங்களையும் நிறுத்தி வைத்து சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்தப் பிரச்னை குறித்து ஆய்வு செய்ய, அசோக் குலாட்டி, பூபிந்தர் சிங் மன், பிரமோத் குமார், அனில் கன்வட் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

இந்த நிலையில் பாரதிய கிசான் சங்கத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான புபிந்தர் சிங் மான் பெயரில் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: நான் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாகவே இருப்பேன். அதனால் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழுவில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாரதிய கிஷான் லோக்சக்தி சார்பில் வழக்கறிஞர் ஏபி சிங் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: நிபுணர் குழுவில் இடம்பெற்ற மற்ற மூன்று பேரையும் நீக்கிவிட்டு, பாரபட்சமின்றி அறிக்கை அளிக்கும் நபர்களை நியமிக்க வேண்டும். குழுவில் உள்ள 3 பேரும், வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவுர்களை குழுவில் நியமித்ததன் மூலம் இயற்கை நீதி மீறப்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவர்கள் எப்படி அனைத்து விவசாயிகளின் கருத்தை கேட்பார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.