சென்னை: தமிழகம் முழுதும், நேற்று எம்.ஜி.ஆரின், 104வது பிறந்த நாள் விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.அ.தி.மு.க., சார்பில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆர்., சிலையை சுற்றி, மேடை அமைக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, மலர் துாவி வணங்கினர். அவர்களை தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள், மலர் துாவி வணங்கினர்.அதன்பின், முதல்வரும், துணை முதல்வரும் இணைந்து, கட்சிக் கொடியேற்றி, நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், இனிப்புகள் வழங்கினர்; அன்னதானத்தை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள், திரளாக பங்கேற்றனர்.கட்சி அலுவலக நிகழ்ச்சி முடிந்ததும், அனைவரும் கிண்டி, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு சென்றனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு கீழே, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, அவரது படத்திற்கு, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள் மலர் துாவி, மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, முதல்வர், துணை முதல்வர் ஆகியோர், தங்கள் வீடுகளில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, எம்.ஜி.ஆர்., படத்திற்கு மரியாதை செலுத்தினர். சென்னை, தி.நகர், ராமச்சந்திரா சாலையில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை ஒட்டி, அ.தி.மு.க., மாநில இளைஞர் அணி இணை செயலர் சுனில் தலைமையில், 1,000 பேருக்கு, வேட்டி, சேலைகள், அன்னதானம் வழங்கப்பட்டன.
ஜெ., பேரவை வட்டச் செயலர் சுரேஷ்குமார், தொழில் அதிபர் சிவகுமார், விழுப்புரம் மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலர் ஜாகீர் உசேன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதேபோல், தமிழகம் முழுதும், அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அ.ம.மு.க., சார்பில், அக்கட்சி பொதுச்செயலர் தினகரன், கட்சியினருடன் சென்று, சென்னை, அண்ணா சாலையில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE