புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் சட்டசபை தேர்தலில் 30 தொகுதிகளிலும் திமுக போட்டியிடும் என திமுக., எம்.பி ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார். இதனால், புதுச்சேரியில் திமுக., - காங்., இடையிலான கூட்டணி உடையும் என கூறப்படுகிறது.
புதுச்சேரியில் திமுக கூட்டணியுடன் காங்., ஆட்சி செய்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் திமுக., 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்நிலையில், விரைவில் சட்டசபை தேர்தல் வரவுள்ளதால், காங்., கூட்டணியில் இருந்து விலகி, திமுக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரியில் திமுக.,வின் முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகன் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக சார்பில் இன்று(ஜன.,18) நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் ஜெகத்ரட்சகன் பேசியதாவது:

புதுச்சேரி தேர்தலில் திமுக கூட்டணியை ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார். புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றும். இதை நான் நிறைவேற்றி காட்டுவேன். அப்படி இல்லாவிட்டால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்துகொள்வேன். புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைந்தவுடன் அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் மாற்றம் நிகழும். புதுச்சேரியில் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.