ஸ்ரீபெரும்புதூர்: துண்டுச்சீட்டு இல்லாமல், விவாதத்திற்கு ஸ்டாலின் தயாராக உள்ளாரா என முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவை உடைக்கவும், ஆட்சியை கவிழ்க்கவும் ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், மக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவோடும் அனைத்து சதித்திட்டங்களும் முறியடிக்கப்பட்டன. தற்போது கூட வரும் 27ம் தேதிக்கு பின், பழனிசாமி முதல்வராக இருப்பாரா எனககூறி வரும் ஸ்டாலின், ஏற்கனவே, இந்தஆட்சி ஒரு மாதத்தில் கவிழும், ஆறு மாதத்தில் கவிழும், ஒரு வருடத்தில் கவிழும் எனக் கூறி வந்தார். ஆனால், நான்கு ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. வரும் சட்டசபை பொதுத்தேர்தலிலும் அதிமுக தான் வெற்றி பெறும்.
ஸ்டாலின் தான் முதல்வர் கனவில் உள்ளார். அவரது கனவு ஒரு போதும் நிறைவேறாது. மீண்டும் அதிமுக ஆட்சிதான் தமிழகத்தில் மலரும். இந்த தேர்தல் மட்டுமல்லாது, வருகிற தேர்தல்களிலும் அதிமுக தான் தொடர்ந்து ஆட்சி அமைக்கும்.
நான், மக்களால், தேர்வு செய்யப்பட்ட முதல்வர் அல்ல என ஸ்டாலின் கூறுகிறார். நான் எம்.எல்.ஏ.,வாக மக்களால் தேர்வு செய்யப்பட்டவன் தானே. அண்ணாதுரை மறைவுக்கு பின்னர், கருணாநிதி எப்படி முதல்வர் ஆனார். முதல்வரை, மக்கள் நேரடியாக தேர்வு செய்ய மாட்டார்கள் என்பதை ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும். நான் ஊர்ந்து வந்து முதல்வர் ஆனேன் என ஸ்டாலின் கிண்டல் செய்கிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதி எந்த எக்ஸ்பிரசில் எப்படி வந்தார், எப்படி முதல்வர் ஆனார் என்று மக்களுக்கு தெரியும்.
திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் மின்தடை தான் ஏற்படும். கடந்த திமுக ஆட்சியில் பல மணி நேரங்கள் இருந்த மின்தடை, அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் தற்போது மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. நாட்டை பற்றியே தெரியாத தலைவர் ஸ்டாலின். என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாராக உள்ளாரா? துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலின் விவாதத்திற்கு தயாரா?

பெண்களை வணங்கும் தமிழகத்தில், உதயநிதி பெண்ணை இழிவுபடுத்தி பேசியிருக்கிறார். அவருக்கு நாவடக்கம் தேவை. அதிமுக.,வில் உழைப்பிற்கு மரியாதை கிடைக்கும் என்பதற்கு நானே சாட்சி. சாதாரண கிளை செயலாளராக இருந்து உழைப்பால் இந்த உயரத்தை அடைந்திருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, முதல்வர் பழனிசாமி, காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE