கோல்கட்டா: மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்., கட்சியில் இருந்து சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.,வில் சேர்ந்த நிலையில், மேலும் ஒரு எம்எல்ஏ., பா.ஜ.,வில் ஐக்கியமாகியுள்ளார்.
மேற்குவங்கம் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரசிற்கும், பா.ஜ.,க்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், திரிணமுல் காங்., கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பா.ஜ.,வில் இணைந்தனர். குறிப்பாக மம்தா அமைச்சரவையில் இருந்த சுவேந்து அதிகாரி, கடந்த மாதம் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். அவருடன் 5 திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் சேர்ந்தனர்.

இந்நிலையில், திரிணமுல் காங்கிரசின் மற்றுமொரு எம்.எல்.ஏ., அரிந்தம் பட்டாச்சார்யா, நேற்று, பா.ஜ.,வில் ஐக்கியமானார். டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர் பா.ஜ.,வில் சேர்ந்துள்ளார். 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பட்டாச்சார்யா, நாடியா மாவட்டம் சாந்திபூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் ஆவார். பின்னர், அவர் திரிணமுல் காங்கிரசில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர், எம்எல்ஏ.,க்கள் என அடுத்தடுத்து கட்சியில் இருந்து கழன்று வருவது முதல்வர் மம்தாவிற்கு மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE