புதுடில்லி: இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் போது, பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர்களுக்கும் போடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் ஜன.,16 அன்று இந்தியாவில் துவங்கியது. முதல்கட்டமாக, டாக்டர்கள், நர்சுகள் மற்றும் முன்கள பணியாளர்கள் என 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணி 3 ஆயிரம் மையங்களில் நடக்கிறது. தற்போது வரை 8,06,484 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இது முடிந்த உடன், இரண்டாம் கட்டமாக, மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. அதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது, பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கும் அப்போது தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், குறிப்பாக எந்த நாளில் தடுப்பூசி போடப்படும் என்ற முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE