மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு வென்றது குறித்து விசாரிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜன.,16ல் உலக புகழ்ப்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் அதிக காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக தேர்வாகும் நபருக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார் பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் 12 காளைகள் பிடித்துள்ளதாக அறிவித்து அவருக்கு கார் பரிசளிக்கப்பட்டது. இந்நிலையில், ஆள்மாறாட்டம் செய்து கண்ணன் முதல் பரிசை வென்றது அம்பலமாகியுள்ளது.

அதாவது, ஜல்லிக்கட்டின் முதல் சுற்றில் 33ம் எண் கொண்ட பனியன் அணிந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் களமிறங்கினார். 7 காளைகளை பிடித்த அவர் 3 சுற்றுகளுக்கு பிறகு காயம் ஏற்பட்டதால், தனது பனியனை கழற்றி, மற்றொரு நபரான கண்ணனிடம் வழங்கிவிட்டு வெளியேறியுள்ளார். அந்த பனியனை அணிந்து களமிறங்கிய கண்ணன், 5 காளைகளை அடக்கினார். இதனால், 33ம் எண் கொண்ட பனியன் அணிந்தவர் 12 காளைகள் அடக்கியதாக அறிவித்தனர். மேடையில் அவரது பெயர் கண்ணன் எனக் கேட்டு அவருக்கு பரிசளிக்கப்படுவதாக அறிவித்தனர்.

மருத்துவ பரிசோதனை பதிவேட்டில் 33ம் எண்ணில் கண்ணனுக்கு பதிலாக ஹரிகிருஷ்ணன் பெயரே இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து 8 காளைகளை பிடித்து 2வது இடம் பிடித்த கருப்பண்ணன் என்னும் மாடுபிடி வீரர் மதுரை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். அதில், ஆள்மாறாட்டம் செய்தது குறித்து குறிப்பிட்டிருந்தார். இது குறித்து, கோட்டாட்சியர் விசாரணை நடத்த கலெக்டர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். உலக புகழ்ப்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்து கார் பரிசை வென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE