புது டில்லி: மருத்துவர்கள் பயன்படுத்தும் முழு கவச உடையை அணிந்து நகைக் கடைக்குள் புகுந்த திருடன், ரூ.13 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்க நகைகளை திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தெற்கு டில்லியின் கால்காஜி பகுதியில் நகைக் கடை ஒன்று உள்ளது. செவ்வாயன்று கடையை பூட்டிவிட்டு சென்ற கடையினர், மறுநாள் வந்து பார்த்த போது 25 கிலோ தங்க நகைகள் திருடு போயிருப்பது கண்டு அதிர்ந்தனர். அந்த சமயத்தில் ஆயுதமேந்திய 5 காவலர்களும் கடையில் இருந்தனர். அவர்களுக்கு திருட்டு நடந்த விஷயமே தெரியவில்லை. இது பற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடையில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி., காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் இரவு 9.30 மணிக்கு கடைக்குள் நுழைவதும், அவர் முழு கவச உடையுடன் இருப்பதும் தெரிந்தது. கடை முழுவதும் ஆராய்ந்து நகைகளை திருடிக்கொண்டு புதன் அதிகாலை மூன்று மணிக்கு ஆட்டோவில் அனைத்தையும் ஏற்றிச் சென்றார்.

விசாரணையில் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டவர் கர்நாடகாவின் ஹூப்ளி பகுதியைச் சேர்ந்த முகமது ஷேக் நூர் என்பதும், தெற்கு டில்லியில் வேலை பார்த்ததும் தெரிய வந்தது. அவரை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE