சென்னை:அரசு மருத்துவ கல்லுாரிகளில், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை, மீண்டும் நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க, மருத்துவ கல்வி இயக்குனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மருத்துவ கல்லுாரி இணை பேராசிரியர் தங்கராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:தமிழகம் முழுதும், அரசு மருத்துவர்களுக்கான பணிமாற்ற மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டது. மருத்துவ கல்லுாரிகளில், காலியாக உள்ள பணியிடங்கள் பற்றிய விபரங்களை, வெளிப்படையாக அறிவிக்காமல் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
சென்னை, செங்கல்பட்டு, மதுரை, கன்னியாகுமரி உட்பட, ஒன்பது மருத்துவக் கல்லுாரிகள் மட்டும், காது, மூக்கு, தொண்டை பிரிவில், பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.அதன்பின், மேலும் ஐந்து கல்லுாரிகளில், பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டது.
காலியிடங்கள், 14 கல்லுாரிகளில் இருந்த போதும், ஒன்பது கல்லுாரி காலியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன.எனவே, காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை, மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஜன., 25க்குள் விளக்கம் அளிக்குமாறு, மருத்துவக் கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE