பெங்களூரு: சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்து வருவதாக, அவருக்கு சிகிச்சை அளிக்கும் விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். வரும், 27ல், அவர் விடுதலை செய்யப்பட உள்ள நிலையில், சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள, பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், உயர் சிகிச்சைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு அவருக்கு தொடர்ந்து, தீவிர சிகிச்சை அளிக்கப் படுகிறது.

இந்நிலையில், மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்துகாணப்படுகிறது. மற்றொருவர் உறுதுணையோடு எழுந்து நடக்கிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஐசியு.,வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உணவு உட்கொள்கிறார். சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைப்பு வழங்குகிறார். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE