புதுடில்லி: குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்தும் பேரணிக்கு, போலீசார் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டில்லியை முற்றுகையிட்டு 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்றம் இச்சட்டங்களை நிறுத்தி வைத்து, பிரச்னைகளை ஆராய குழு அமைத்துள்ளது. மத்திய அரசு 18 மாதங்களுக்கு சட்டங்களை நிறுத்தி வைக்க தயார் என்று அறிவித்துள்ளது. ஆனால் விவசாயிகள் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.குடியரசு தினத்தன்று டில்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணிக்கு அவர்கள் தயாராகி வருகின்றனர். டில்லி போலீசாரிடம் அதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், டிராக்டர் பேரணி குறித்து டில்லி போலீசார் முடிவெடுக்க அனுமதி வழங்கியது.

இந்நிலையில், குடியரசு தினத்தன்று விவசாயிகள் பேரணி நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். 3 வழிகளில் பேரணி நடத்தி கொள்ளலாம் எனவும், இந்த பேரணி அமைதியாக நடப்பதை விவசாய சங்கங்கள் உறுதி செய்ய வேண்டும். குடியரசு தினத்திற்கு இடையூறு செய்யக்கூடாது என தெரிவித்துள்ளனர். டிக்ரி, சிங்கு, காசிப்பூர் பகுதிகளில் மட்டுமே பேரணி நடத்த வேண்டும் எனவும், அங்கு தடுப்புகள் அகற்றப்படும் என தெரிவித்துள்ளனர்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE