பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவிற்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். வரும், 27ல், அவர் விடுதலை செய்யப்பட உள்ள நிலையில், சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்றும் உறுதியானது. தற்போது அவர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சசிகலா உடல்நிலை சீராக உள்ளது, உணவு உட்கொள்கிறார். சசிகலாவுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை. சசிகலா எழுந்து உட்கார்ந்து, உதவியுடன் நடக்கிறார். ரத்தத்தில் சர்க்கரை அளவு காலையில் 205 ஆக இருந்த அளவு தற்போது 157 ஆக குறைந்துள்ளது. அவருக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது. சசிகலா சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறார். அவரை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐசியூ.,வில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE