புதுடில்லி :மத்திய அரசின், பால சக்தி புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியுள்ள குழந்தைகளுடன், பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று உரையாடினார்.
அப்போது, கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருந்த காலகட்டத்தில், அனைவரும் கை கழுவுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்ட குழந்தைகளை, அவர் வெகுவாக பாராட்டினார்.புதிய கண்டுபிடிப்புகள், சமூக சேவை, வீரதீர செயல்கள், கல்வி, விளையாட்டு, கலை, கலாசார துறைகளில் சாதனை புரிந்த குழந்தைகளுக்கு, பிரதமர் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் அமைப்பின் சார்பில், பால சக்தி புரஸ்கார் விருதுகளை, மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
கடந்த ஆண்டுக்கான பால சக்தி புரஸ்கார் விருதுக்கு, நாடு முழுவதிலும் இருந்து, 32 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன், பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று உரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது:
நாட்டின், 75வது சுதந்திர தினத்தை, நாம் விரைவில் கொண்டாட உள்ளோம். இந்த நேரத்தில், இந்த நாட்டுக்காக என்ன செய்ய முடியும் என்பதை, இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டும்.கொரோனா நெருக்கடி காலகட்டத்தில், இந்த விருதுகளை வென்றிருக்கும் நீங்கள், தனிச்சிறப்பு வாய்ந்தவர்களாக கருதப்படுகிறீர்கள்.துாய்மை இந்தியா திட்டம் மற்றும் கொரோனா பரவல் காலகட்டத்தில், கை கழுவுவதன் அவசியம் குறித்த உங்கள் விழிப்புணர்வு பிரசாரங்கள், மக்கள் மத்தியில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.
நீங்கள் அனைவரும் மூன்று உறுதி மொழியினை ஏற்க வேண்டும். முதலாவது, உங்கள் செயல்களில் வேகம் குறையாமல், எப்போதும் நிலையான தன்மையை பின்பற்ற வேண்டும்.இரண்டாவது, இந்த நாட்டுக்காக நாம் உழைக்க வேண்டும். நம் அனைத்து பணிகளிலும், நாட்டின் நன்மை குறித்த அக்கறை இருக்க வேண்டும். அப்படியிருந்தால், நாம் செய்யும் பணிகள், பெரிய உயரத்தை தொடும்.
மூன்றாவது, எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாலும், பணிவாக இருக்க பழக வேண்டும். இந்த குணம் இருந்தால், மற்றவர்களும் நம்முடன் சேர்ந்து, நம் வெற்றியை கொண்டாடுவர்.
இவ்வாறு, பிரதமர் கூறினார்.
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த, பிரசித்தி சிங், 7, என்ற சிறுமி, எட்டு அரசு பள்ளிகள் மற்றும் பல்வேறு பொது இடங்களில், 9,000க்கும் மேற்பட்ட, பழ மரங்களை நட்டுள்ளார். இதன் வாயிலாக, ஆயிரக்கணக்கான பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கு உணவு ஆதாரத்தை ஏற்படுத்தியுள்ளார். பிரசித்தி சிங்கின் இந்த மகத்தான பணியை அனைவரும் பின்பற்ற வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE