சென்னை : தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை முழுமையாக கட்டுப்படுத்துவது; பொது ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன், முதல்வர் இ.பி.எஸ்., வரும் 29ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 2020 மார்ச் 25 முதல், பல்வேறு தளர்வுகளுடன் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. நோய் பரவல், அனைத்து மாவட்டங்களிலும் குறைந்துள்ளது. எனினும், தினமும் 500க்கும் மேற்பட்டோர், நோய் பரவலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், தமிழகத்தில் பொது ஊரடங்கு, இம்மாதம் 31ம் தேதி நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளது.எனவே, பொது ஊரடங்கை நீட்டிப்பதா; தளர்த்துவதா என்பது குறித்தும், கொரோனா நோய் பரவலை முற்றிலுமாக தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், முதல்வர், வரும் 29ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

தலைமைச் செயலகத்தில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, இந்த ஆலோசனை நடக்க உள்ளது. அதன்பின், மருத்துவ நிபுணர் குழுவினருடன், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கை குறித்து, முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனை கூட்டம் முடிந்த பின், பொது ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, அன்று அல்லது மறுநாள் வெளியாகும்.