புதுடில்லி: டில்லி செங்கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்த விவசாயிகள், அங்கு தங்களது அமைப்பு கொடியை ஏற்றியதுடன், பொருட்களை சேதப்படுத்தினர். இதனையடுத்து, அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். ஒரு மணி நேர போராட்திற்கு பின்னர் போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள், விவசாயிகளை விரட்டி செங்கோட்டையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விவசாய மசோதாவிற்கு எதிராக டிராக்டர் பேரணியை நடத்திய விவசாயிகள், அனுமதி மறுக்கப்பட்ட பகுதிகளிலும் பேரணி வந்தனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். விவசாயிகள் டில்லிக்குள் நுழைவதை தடுக்க சில இடங்களில் போலீசார் வழியை மறித்து அமர்ந்தனர். இதனால், டில்லி போராட்டக்களமானது.

மத்திய டில்லிக்குள் நுழைந்த விவசாயிகள், அங்கிருந்து செங்கோட்டைக்குள் டிராக்டரில் பேரணியாக சென்று குவிந்தனர். செங்கோட்டை வளாகத்தை, டிராக்டர் பூங்காவாக மாற்றிய அவர்கள் அங்கு தேசியக்கொடி ஏற்றப்படும் கம்பத்தில் தங்களது கொடியை ஏற்றினர். செங்கோட்டையின் உச்சிக்கும் சென்று, அங்கும் தங்களது அமைப்பின் கொடியை வைத்தனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை விரட்டினர். அங்கு பாதுகாப்புக்கு துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE