சென்னை: ''பொது தேர்வுக்கான வினாத்தாள் முறையில், மாற்றம் இருக்குமா என்பது குறித்து, விரைவில் முடிவு செய்யப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான, பொதுத்தேர்வு பணிகள் துவங்கி உள்ளன. கொரோனாவால் பாடங்கள் நடத்துவது பாதிக்கப்பட்டதால், பொதுத்தேர்வை எளிமையாக நடத்துவது குறித்து, பள்ளி கல்வித்துறையும், தேர்வுத்துறையும் ஆலோசித்து வருகின்றன.
இதன்படி, மிகவும் சிக்கலான கேள்விகள் இல்லாமல், எளிமையான வினாக்கள் நிறைந்த, வினாத்தாள் தயாரிக்கவும், தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ''பொதுத் தேர்வில் மாற்றங்கள் இருந்தாலோ அல்லது எளிமைப்படுத்துவது இருந்தாலோ, அதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சென்னையில் சாரண, சாரணியர் இயக்க வளாகத்தில், நேற்று நடந்த குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற, அவர் கூறியதாவது:
சாரண, சாரணியர் இயக்க மாணவர்களுக்கு, இலவச சீருடை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்கும். பொதுத் தேர்வுகளை எளிமையாக நடத்துவதற்கு, அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அளவில் ஆலோசனை நடந்து வருகிறது. மாற்றங்கள் இருந்தால், விரைவில் அறிவிப்போம்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு, அவர்களின் விருப்பப்படி, விரும்பும் மாவட்டங்களில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும். பகுதி நேர நுாலகங்கள் விரைவில் திறக்கப்படும். நுாலகங்களில் காலியாக உள்ள இடங்கள், விரைவில் நிரப்பப்படும்.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE