புதுடில்லி: குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்திய பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளதாகவும், 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லியில், விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், பயங்கர வன்முறை வெடித்தது. வன்முறையாளர்கள், செங்கோட்டையில் ஏறி, விவசாய சங்க கொடியை ஏற்றினர். டில்லி, கலவரக்காடாக மாறியதையடுத்து, அங்கு, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறைக்கு, விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வன்முறையில் 8 பஸ்கள் மற்றும் 17 தனியார் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர். முகர்பா சவுக், காசிப்பூர், ஐடிஓ, சீமாபூரி, நங்லோய் டி பாயின்ட், டிக்ரி எல்லை, செங்கோட்டை பகுதிகளில் தான் அதிகளவு வன்முறை ஏற்பட்டது.
டிராக்டர் பேரணி தொடர்பாக சயுன்க்த் கிஷான் மோர்ச்சா சங்க்தினர் போலீசாருடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, அமைதியாக பேரணி நடத்துவதாக தெரிவித்தனர். ஆனால், திட்டமிட்டதற்கு முன்பாகவே, 8:00 மணிக்கு டிராக்டர் பேரணியை துவக்கியதால், வன்முறை வெடித்தது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, டில்லியில் முக்கிய இடங்களில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE