பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்ட, ஜெயயலிதாவின் தோழி சசிகலா, இன்று (ஜன.,27) விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையிலேயே தங்க வேண்டியுள்ளது.
அதற்கான ஆவணங்களை சிறைத்துறை தலைமை கண்காணிப்பாளர் கேசவ் மூர்த்தி வழங்கினார். எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், எப்போது, 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார் என்பது தெரியவில்லை.
மூச்சுத்திணறல்
சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், ஜெ., தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர், 2017 பிப்., 15ல், அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சசிகலாவுக்கு, கடந்த வாரம், சிறையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில், அவர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டது.
அவருடன், சிறையில், ஒரே அறையில் தங்கியிருந்த இளவரசியும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இருவருக்கும், பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது, சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. உதவியுடன் எழுந்து நடக்கிறார் என்று, மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கர்நாடக சிறைத்துறை விதிமுறைப்படி, சசிகலாவின் நான்கு ஆண்டுகள் தண்டனை காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, சிறை அதிகாரிகள், முழு கவச உடை அணிந்து, சசிகலா சிகிச்சை பெறும் வார்டுக்கு, இன்று காலை சென்று, விடுதலை ஆகும் கோப்பில் அவரிடம் கையொப்பம் பெற்றனர். இதன் மூலம், அதிகாரபூர்வமாக அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்டதற்கான பத்திரத்தை சிறைத்துறை தலைமை கண்காணிப்பாளர் கேசவ் மூர்த்தி வழங்கினார். இதன் நகல் ஒன்றை, சிறை அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கி, சசிகலா தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிவித்தனர். அவரது போலீஸ் பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டது.
கேள்விக்குறி
சிறையில் உள்ள அவரது உடைமைகளை பெற்றுகொள்ள, சசிகலா, யாரை பரிந்துரைக்கிறாரோ, அவரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், சசிகலா கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவதால், குணமடைந்த பிறகே, அவர் தமிழகம் புறப்படுவார் என, தெரிகிறது.
இதற்கிடையே, இளவரசி, பிப்., 5ல் விடுதலையாவார் எனக் கூறப்படுகிறது. சுதாகரன் தரப்பில், நேற்று மாலை வரை, அபராத தொகை செலுத்தவில்லை. இதனால், அவரது விடுதலை கேள்விக்குறியாக உள்ளது.
10வது நாள் டிஸ்சார்ஜ்

இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கொரோனா விதிப்படி சசிகலா 10வது நாள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்று உடன் 3 நாட்கள் சுவாச கருவி இல்லாமல் சுவாசிக்கும் பட்சத்தில் 10வது நாள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். மேலும் விக்டோரியா மருத்துவமனையிலேயே சிகிச்சையை தொடர்வது என்ற முடிவை சசிகலாவும், அவரது குடும்பத்தார்களும் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE