சென்னை : சென்னை, மெரினா கடற்கரையில், 58 கோடி ரூபாயில், பிரமாண்டமாக கட்டப்பட்ட, ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசியலில், ஆளுமை மிக்க தலைவராக வலம் வந்தவர், ஜெயலலிதா. அ.தி.மு.க., பொதுச் செயலராகவும், நான்கு முறை முதல்வராகவும் இருந்து, பல சாதனைகள் படைத்தவர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், 2016 டிச., 5ம் தேதி மறைந்தார். அவரது உடல், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிட வளாகத்தில், எம்.ஜி.ஆர்., சமாதிக்கு கிழக்கு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இவ்விடத்திற்கு, 'எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா நினைவிடம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டு, டிச., 6ல் அரசாணை வெளியிடப்பட்டது.

பொன்மொழி
ஜெயலலிதா நினைவிடம் கட்ட, 2018 மே, 7ம் தேதி, முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதன்பின், 50 ஆயிரத்து, 422 சதுர அடி பரப்பளவில், பொதுப்பணி துறை வாயிலாக, ஜெ., நினைவிடம் அமைக்கும் பணி துவக்கப்பட்டது. ஜெ., நினைவிடத்தில், மூன்று கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம், பீனிக்ஸ் பறவை தோற்றத்திற்குள் அமைந்துள்ளது. இடது பக்கத்தில் அருங்காட்சியகம், வலது பக்கத்தில் அறிவுசார் மையம் இடம் பெற்றுள்ளது.

நினைவிடத்தில், விலை உயர்ந்த கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 'மக்களால் நான்; மக்களுக்காக நான், அமைதி, வளம், வளர்ச்சி' ஆகிய, ஜெயலலிதாவின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன. நினைவிட வளாகத்தில், புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது; ஏராளமான மலர் செடிகளும் நடப்பட்டுள்ளன. இரவில் நினைவிடம் ஜொலிக்கும் வகையில், வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஜெ., நினைவிடத்தை, இன்று காலை, 11:00 மணிக்கு, முதல்வர் பழனிசாமி, திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். 'நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில், அ.தி.மு.க.,வினர் அனைவரும், குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும்' என, முதல்வரும், துணை முதல்வரும், வேண்டுகோள் விடுத்தனர். அதையேற்று, அனைத்து மாவட்டங்களில் இருந்தும், கட்சி நிர்வாகிகள், பெரும் திரளாக, ஜெ., நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
நினைவு இல்லம் நாளை திறப்பு!
சென்னை, போயஸ் கார்டனில், ஜெயலலிதா வசித்து வந்த, 'வேதா நிலையம்' இல்லம், தமிழக அரசு சார்பில், நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. அதை, நாளை காலை, 10:30 மணிக்கு, முதல்வர் பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE