புதுடில்லி: டில்லியில் டிராக்டர் பேரணியை தடுக்க முயன்ற போலீசார் மீது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கத்தி, கம்பால் தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண் சட்டத்திற்கு எதிராக டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், நேற்று குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் போலீசார் அனுமதித்த பாதைகளை தவிர்த்து மற்ற இடங்களில் நுழைந்தனர். இதற்காக போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை அடித்து நொறுக்கினர். செங்கோட்டைக்குள் நுழைந்து, சீக்கிய கொடியை ஏற்றினர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். இதனால், பயங்கர வன்முறை வெடித்தது. அத்துமீறிய போராட்டக்காரர்களை கண்ணீர்புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கலைக்க முயன்றனர்.
இதனை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தி, கம்புகளை கொண்டு போலீசாரை விரட்டி விரட்டி தாக்கினர். இந்த சம்பவத்தில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர். செங்கோட்டையில் மேலே ஏறிய போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயலும் போது, மேல் இருந்து கீழே விழுந்து போலீஸ் ஒருவர் காயமடைந்தார். செங்கோட்டையில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கம்பை கொண்டு கடுமையாக தாக்கினர்.

அப்போதும், சில போலீசார் மேலே இருந்து கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். தங்களை விட்டுவிடும்படி கெஞ்ச வேண்டிய நிலைமை போலீசாருக்கு ஏற்பட்டது. இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வன்முறை தொடர்பாக 200 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE