சென்னை:சென்னை மெரினாவில் அமைக்கப்பட்ட ஜெ., நினைவிடம், நேற்று கோலாகலமாக திறக்கப்பட்டது. நினைவிடத்தை திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி., ''சட்டசபை பொதுத் தேர்தலில், பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஜெ., ஆட்சி அமைப்போம். அதுவே நம் லட்சியம்,'' என, தெரிவித்தார்.
சென்னை, மெரினா கடற்கரையில், எம்.ஜி.ஆர்., நினைவிட வளாகத்தில், 'பீனிக்ஸ் பறவை' வடிவில், 58 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட, ஜெ., நினைவிடம் திறப்பு நிகழ்ச்சி, நேற்று காலை நடந்தது.துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். ஜெ., நினைவிடத்தை, ரிப்பன் வெட்டி, முதல்வர் பழனிசாமி., திறந்து வைத்தார். அதற்கான கல்வெட்டும் திறக்கப்பட்டது.

தைரியசாலி
அதன்பின், முதல்வர், துணை முதல்வர் சபாநாயகர் தனபால், தலைமைச் செயலர் சண்முகம் ஆகியோர், ஜெ., நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் துாவியும் மரியாதை செலுத்தினர்.அவர்களை தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், மலர் துாவி மரியாதை செலுத்தினர். பின், எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில், மலர் வளையம் வைத்தும், மலர் துாவியும், மரியாதை செலுத்தினர்.
நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி., பேசியதாவது:எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், கட்சியை, 1989ல் ஒருங்கிணைத்து, பொதுச்செயலராக பதவியேற்று, கட்சியை வழி நடத்தியவர். ராணுவ கட்டுக்கோப்போடு, கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி, பெண் குலத்திற்கே பெருமை சேர்த்தவர். இரும்பு மங்கை என, பெயர் பெற்றவர். எதிரிகளாலும் தைரியசாலி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.

மாநில கட்சி, அகில இந்திய அளவில், லோக்சபாவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் அளவுக்கு, வென்று காட்டி பெருமைப்படுத்தியவர்.இந்தியாவிலேயே மிக அதிக நாட்கள், பதவியில்இருந்த பெண் முதல்வர் என்ற சாதனையை படைத்து, பல்வேறு திட்டங்களை, மக்களுக்கு வழங்கியவர். அவர் கொண்டு வந்த, மக்கள் நலத்திட்டங்கள், உலக அளவில் பாராட்டை பெற்றன.
பலர் தங்கள் நாட்டிலும் நடைமுறைப்படுத்தினர். மழை நீர் சேகரிப்பு என்ற, மகத்தான திட்டத்தை கொண்டு வந்து, தமிழகத்தில் நீர்வளம் பெருக அடித்தளமிட்டவர்.தமிழகத்தில், கட்சி, அரசியல் ஆர்வம் இல்லாத பல பெண்களிடம் சென்று, உங்கள், 'ரோல் மாடல்' யார் என்று கேட்டால், சற்றும் தாமதமில்லாமல், ஜெ., பெயரை சொல்கின்றனர் என்பதும், ஜெ.,வை போல இருக்க வேண்டும் என்ற எண்ணம், பல பெண்களிடம் நிலவிக் கொண்டிருப்பதையும், நாம் காண்கிறோம்.
அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மெரினா கடற்கரையில், நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.ஜெ., உடலை நல்லடக்கம் செய்த இடத்தில், நினைவிடம் கட்டக்கூடாது என பினாமிகளை வைத்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். அவரது தந்தை இறந்த போது, இதே பகுதியில், அடக்கம் செய்யப்படுகின்ற நிலையில், ஜெ., நினைவிடம் கட்டுவதை எதிர்த்து போடப்பட்ட வழக்குகளை, இரவோடு இரவாக, நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெற்றவர், இதே ஸ்டாலின் தான்.

வீர சபதம்
எந்த அளவுக்கு, ஜெ.,க்கு நினைவிடம் கட்டுவதை தடை செய்ய வேண்டும் என்ற, தீய எண்ணம் கொண்டவர் ஸ்டாலின் என்பது தெளிவாக தெரிகிறது. அவரது பினாமிகள், வழக்குகளை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, ஸ்டாலினின் கபட நாடகத்தை, உலகமே அறிந்துள்ளது; அவரது சாயம் வெளுத்துள்ளது.
நுாறாண்டுகள் ஆனாலும், அ.தி.மு.க., கட்சியும், ஆட்சியும் தொடரும்; எவராலும் அழிக்க முடியாத, எக்கு கோட்டையாக திகழும் என, சட்டசபையில், ஜெ., சூளுரைத்தார்.அதை ஏற்று, வரும் சட்டசபை பொதுத் தேர்தலில், பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஜெ., ஆட்சி அமைப்போம். அதுதான் நம் லட்சியம்.அதுதான் ஜெ.,க்கு, நாம் செலுத்துகின்ற நன்றிக்கடன் என்பதை, ஒவ்வொரு தொண்டரும் உணர வேண்டும்.
இரவு பகல் பாராமல் பாடுபட வேண்டும். ஜெ., கொண்டு வந்த திட்டங்களை, மக்களுக்கு எடுத்து செல்லி, அவரது ஆட்சியை அமைத்து, இதே நினைவு மண்டபத்தில், நாம் அனைவரும் நன்றி செலுத்த, வீர சபதம் ஏற்போம்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.
விழாவில், சபாநாயகர்தனபால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். தலைமை செயலர் சண்முகம் வரவேற்றார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன் நன்றி கூறினார்.குவிந்தனர் அ.தி.மு.க., தொண்டர்கள் ஜெ., நினைவிட திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தமிழகம் முழுதும் இருந்து, அ.தி.மு.க.,வினர் சென்னை வந்தனர்.
கடற்கரை சாலை, வாலாஜா சாலை பகுதியில், கட்சியினர் குவிந்தனர்
* ஜெ., நினைவிட வளாகத்திற்குள், குடிநீர் வசதி செய்யப்படாததால், காலை, 7:00 மணிக்கே, அங்கு சென்றவர்கள் தாகத்தில் தவித்தனர்
* கடற்கரை சாலையில், மாநகராட்சி சாலையில்,தற்காலிக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு இருந்தன
* நினைவிடம் திறப்பு நிகழ்ச்சிக்கு வந்த கட்சி தொண்டர்களுக்கு, கட்சியினர் சார்பில், ஆங்காங்கே தக்காளி சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை வழங்கப்பட்டன
* கூட்டம் அதிகம் என்பதால், சமூக இடைவெளி என்பது எங்கும் பின்பற்றப்படவில்லை. பலர் முக கவசம் அணியாமல் வந்தனர்.போக்குவரத்து நெரிசல்ஜெ., நினைவிடம் திறப்பு காரணமாக, காலை, 6:00 மணியில் இருந்து, கடற்கரை சாலையில், வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்பட வில்லை. தலைமை செயலகம் மற்றும் எழிலகம் வந்த அரசு ஊழியர்கள், பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர்.
நிகழ்ச்சி முடிந்த பின், வாலாஜா சாலை, பாரதி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, அண்ணாசாலை என, முக்கிய சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
'மக்களுக்கான நினைவாலயம்'
நிகழ்ச்சியில், துணை முதல்வர் பன்னீர்செ்ல்வம்., பேசியதாவது:ஜெயலலிதா வகுத்து தந்த திட்டங்களால் பயன்பெற்று, தங்கள் வாழ்வை நிலை நிறுத்திக் கொண்ட, தமிழக மக்களும், அவர் மீட்டு தந்த, ஜீவாதார உரிமைகளை மீண்டும் தனதாக்கிக் கொண்ட தமிழகமும், அந்த நன்றியை, ஒருபோதும் மறவாது.அந்த நன்றி உணர்வுக்கு எடுத்துக்காட்டாக, நினைவிடம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
இது, அ.தி.மு.க., தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நினைவாலயம்.இது, வெறும் நினைவிடம் அல்ல. உண்மை, நேர்மை, வாய்மை, சத்தியம், சாதனைகள் ஒளி வீசும் இடம். தமிழகத்தில், தீய சக்திகள் தலையெடுத்து விடாமல் தடுக்க, நாளும் உழைக்க வேண்டும் என்று, தொண்டர்களுக்கு பாடம் எடுக்கும் இடம்.'அம்மா' என்ற மூன்றெழுத்து, நம்முடைய உயிர் எழுத்து. எதிரிகளுக்கோ அது ஆயுத எழுத்து.
இந்த நினைவிடத்திற்கு வரும் போதெல்லாம், வீரம் பிறக்கும்; நெஞ்சில் ஈரம் சுரக்கும்.வரும் சட்டசபை தேர்தலில், நாங்கள் வெற்றி பெற வழிகாட்டுங்கள். வெற்றிப் பாதையில் பயணம் செய்ய ஒளி காட்டுங்கள். தமிழகத்தின் நலனுக்காக, தமிழர்களின் உயர்வுக்கு உழைப்பதற்காக, எங்களுக்கு ஆசி கூறுங்கள் தாயே.தேர்தல் களத்திலே, எதிரிகளை வென்று, வெற்றிக் கனியை, இங்கு வந்து உங்கள் பொற்பாதங்களில் சமர்பிக்க, எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே. இவ்வாறு, அவர் பேசினார்.
போக்குவரத்து நெரிசல்
ஜெ., நினைவிடம் திறப்பு காரணமாக, காலை, 6:00 மணியில் இருந்து, கடற்கரை சாலையில், வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. தலைமை செயலகம் மற்றும் எழிலகம் வந்த அரசு ஊழியர்கள், பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர்.நிகழ்ச்சி முடிந்த பின், வாலாஜா சாலை, பாரதி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, அண்ணாசாலை என, முக்கிய சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE