புதுடில்லி: விவசாயிகள் போராட்டம் குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை என அமெரிக்க பாடகி ரிஹானா கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், 'யாரும் பேசப்போவதில்லை' என்றும் 'அவர்கள் விவசாயிகள் அல்ல பயங்கரவாதிகள்' எனவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லையில் 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். மத்திய அரசுடனான பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்ததால், குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. இதில் 400க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா தனது டுவிட்டர் பக்கத்தில் விவசாயிகளின் போராட்டத்தை பற்றிய ஒரு செய்தியை பகிர்ந்து 'ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?' என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த பதிவை பலரும் ரீ-டுவிட் செய்தனர். அதுமட்டுமல்லாமல், பிரபலமானவர் விவசாயிகள் போராட்டம் குறித்து பதிவிட்டுள்ளதால், உலகளவில் டிரெண்டானது. இந்நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ரிஹானாவை கடுமையாக சாடியுள்ளார்.

கங்கனா ரனாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: யாரும் அதைப் பற்றி பேசப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் விவசாயிகளே அல்ல. இந்தியாவைப் பிரிக்க நினைக்கும் பயங்கரவாதிகள். அதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் நாட்டை சீனா ஆக்கிரமித்து, அமெரிக்காவைப் போல ஒரு சீன காலனித்துவ நாடாக மாற்ற முயற்சிக்கிறது. அமைதியாக உட்கார், முட்டாளே. உங்களைப் போல நாங்கள் நாட்டை விற்பவர்கள் அல்ல. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.