விழுப்புரம்: மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்வோம் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கானை குப்பம் கிராமத்தில் நடந்த ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில், திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: நாங்கள் சொல்வதை தான் ஆளுங்கட்சியினர் செய்கின்றனர். மக்கள் தெரிவிக்கும் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். டெண்டர் விடுவதிலும், ஊழல் செய்வதிலும் தான் அதிமுக அரசு அக்கறை செலுத்துகிறது. ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். கோரிக்கை மனுக்களை அளித்தவர்கள் அதற்குரிய ஒப்புகை சீட்டை பெற்று கொள்ளவும். திமுக ஆட்சிக்கு வந்ததும், கோரிக்கை நிறைவேறாவிட்டால், ஒப்புகை சீட்டுடன் என்னை சந்திக்கலாம்.
எந்த தொகுதிக்கு சென்றாலும், தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று இல்லை என்பதையே உணர முடிகிறது. ஆட்சி என்ற ஒன்று இருந்திருந்தால், மக்களின் அன்றாட பிரச்னைகளை தமிழக அரசு தீர்த்து வைத்திருக்கும். மக்கள் வைக்கும் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றுவதில்லை. பல்லாயிரகணக்கான மக்கள் என்னிடம் கோரிக்கை வைப்பதை பார்த்து முதல்வர் மிரண்டு போயுள்ளார். இந்த ஆட்சியில் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் ஸ்டாலினால் குறைகளை கூற முடியாது என முதல்வர் கூறுகிறார். கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலே போதும், இந்த ஆட்சியின் குறைகளை கண்டுபிடித்து விடலாம்.

விழுப்புரத்தில் தடுப்பணை இடிந்து விழும் சப்தம், தாராபுரம் பாலம் விரிசல் விழும் சத்தம் கேட்கும். கரூரில் மினி கிளினிக் விழும் சப்தம் கேட்கும். நாமக்கல்லில் மருத்துவ கல்லூரிஇடிந்துவிழுந்த சப்தம் கேட்கும். இப்படி இடிந்து விழும் சப்தம் கேட்டாலே அது பழனிசாமி அரசு தான் என புரிந்து கொள்ள முடியும். கடந்த 10 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டத்தில் பல திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களிடம் தமிழகம் சிக்கி தவிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE