திருவனந்தபுரம் : 'கொரோனா பரவலால் வருமானம் குறைந்ததால் கேரள அரசுக்கு 11.7 கோடி ரூபாயை செலுத்த முடியவில்லை' என பத்மனாப சுவாமி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கேரள திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மனாப சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகத்தை அரசு ஏற்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் 'கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கே உள்ளது' என கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
மன்னர் குடும்பம் பொறுப்பேற்கும் வரை மாவட்ட நீதிபதி தலைமையில் கோவிலை நிர்வகிக்க இரண்டு குழுக்களையும் அமைத்தது. கோவில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்குச் செலவு செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் 'அந்த தொகையை கோவில் நிர்வாகம் திரும்ப வழங்க வேண்டும்' என்றும் கூறியது.

கொரோனா பரவல் காரணமாக பத்மனாப சுவாமி கோவில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. பின் ஆகஸ்டில் திறக்கப்பட்டது.கோவிலில் அர்ச்சகர்கள் உட்பட சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து அக்டோபரில் கோவில் மீண்டும் மூடப்பட்டு சமீபத்தில் தான் திறக்கப்பட்டது. குறைந்த அளவு பக்தர்களே கோவிலுக்குள் தினமும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கோவிலை நிர்வகிக்கும் குழு தெரிவித்ததாவது: கோவில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக கேரள அரசு கடந்த ஆண்டு 11.7 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. கொரோனா பரவலால் கோவிலுக்கு கடந்த ஆண்டு வருமானம் பெரிதும் குறைந்து விட்டது.
இதனால் கேரள அரசுக்கு 11.7 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்த முடியாத நிலை உள்ளது. இந்த தொகையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு குழு தெரிவித்தது.இதற்கு நீதிபதிகள் 'இந்த விவகாரத்தில் நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. உங்கள் கோரிக்கை கேரள அரசுக்கு அனுப்பப்படுகிறது. கேரள அரசு தான் இது பற்றி முடிவெடுக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE