கோவை:''கொங்கு மண்டலம் அ.தி.மு.க., கோட்டை என ஏமாற்றுகின்றனர்; லோக்சபா தேர்தலில் ஓட்டை விழுந்து விட்டது; வரும் சட்டசபை தேர்தலில், குழி தோண்டி புதைப்போம்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி, கோவை கொடிசியா மைதானம் அருகே நேற்று நடந்தது. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றபின், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:அ.தி.மு.க.. அரசால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை, 100 நாளில் தீர்க்க மனுக்கள் வாங்கப்படுகின்றன. அ.தி.மு.க., செய்ய தவறிய கடமையை, தி.மு.க., அரசு செய்து கொடுக்கும். ஒரு கோடி குடும்பங்கள் பலனடையும்.சில நாட்களுக்கு முன், 123 ஜோடிகளுக்கு, கோவையில் அ.தி.மு.க.,வினர் திருமணம் நடத்தி வைத்தனர். அப்போது, 'வாழும் காமராஜர்' என முதல்வர் பழனிசாமியை சொல்கிறார் வேலுமணி. இதை விட பெரிய அவமானம், காமராஜருக்கு இருக்க முடியுமா?அன்றைய தினம் வேலுமணி மீதான ஊழல் வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது; எல்.இ.டி., விளக்கு பொருத்தியதில் முறைகேடு நடந்திருப்பதாக, தி.மு.க., வழக்கு தொடர்ந்திருந்தது. அதில், ஊழல் நடக்கவில்லை என தமிழக அரசால் சொல்ல முடியவில்லை. லோக் ஆயுக்தா விசாரணைக்கு அனுப்பியிருப்பதாக, அரசு வக்கீல் கூறியிருக்கிறார். அப்படியெனில், முறைகேடு நடந்திருப்பதை அரசு தரப்பு ஒப்புக்கொண்டுதானே இருக்கிறது; அதுதானே அர்த்தம்? வழக்கு பாயும்கோவையில் வேலுமணி, ஊழல் சாம்ராஜ்ஜியத்தையே நிறுவியிருக்கிறார்; அவரது சகோதரர்கள், பினாமிகள் தவிர வேறு யாரும் உள்ளே நுழைய முடியாது. ஆளுங்கட்சியின் மற்ற ஒப்பந்ததாரர்கள் கூட, மாநகராட்சி மற்றும் மாவட்ட டெண்டர்களுக்குள் நுழைய முடியாது. அத்தகைய ஊழல் கோட்டையை உருவாக்கி வைத்திருக்கிறார். வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சரான பின், அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே டெண்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. வேலுமணிக்கு வேண்டிய நிறுவனம் ஒன்றுக்கு, 2011-12ல் ரூ.17 கோடியாக வருவாய் இருந்தது; வேலுமணி அமைச்சரான பின், அதன் வருவாய், 3,000 சதவீதம் அதிகரித்துள்ளது.டான்சி வழக்கும் இப்படித்தான் ஆரம்பித்தது. ஜெ., - சசிகலா இணைந்து, 1991-92ல் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டுடன், ஜெயா பப்ளிகேசன் நிறுவனத்தை துவக்கினர். டான்சி நிலத்தை எப்படி வாங்க முடிந்தது என வழக்கு தொடர்ந்ததும், அந்நிலத்தை ஜெ., திருப்பிக் கொடுத்தார். அதேபோல், வேலுமணி மற்றும் அவரது ஆதரவு நிறுவனங்கள் தொடர்பாக வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. தி.மு.க., ஆட்சி அமைந்ததும் அவர் மீது வழக்கு பாயும்.இன்று அமைச்சராக இருப்பதால், அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் தலையை ஆட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆட்சி மாறும்; அன்று காட்சியும் மாறும்.மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும். கொங்கு மண்டலம் அ.தி.மு.க., கோட்டை என ஏமாற்றுகின்றனர். கடந்த லோக்சபா தேர்தலில், ஓட்டை விழுந்தது. வரும் சட்டசபை தேர்தலில், ஆழமா குழி தோண்டி, மொத்தமாக புதைப்போம்; மக்கள் பேராதரவுடன் நடத்தி முடிப்போம். இது, உறுதி.இவ்வாறு, அவர் பேசினார்.'கருணாநிதி கடைசி ஆசை!ஸ்டாலின் மேலும் பேசுகையில், ''கருணாநிதியிடம் வெற்றி மாலையை ஒப்படைக்க வேண்டும். அவரது கடைசி ஆசை ஆட்சிக்கு வர வேண்டும் என்பதல்ல; நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதே, அவரது கடைசி ஆசை. கருணாநிதி மறைந்தபோது, அடக்கம் செய்ய, 6 அடி இடம் கொடுக்க மறுத்தார்கள். அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்,'' என்றார்.'ஒரு ஊராட்சிக்கு ஒரு கோடி கொள்ளை'ஸ்டாலின் பேசுகையில், ''ஒரு ஊராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் வீதம், 12 ஆயிரத்து 500 ஊராட்சிகளுக்கு, 12 ஆயிரத்து கோடி ரூபாய் கோடி ஊழல் செய்து, அரசு பணத்தை சுருட்டியிருக்கின்றனர். இது, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரூ.170 மதிப்புள்ள, 25 கிலோ சுண்ணாம்பு பவுடர் மூட்டைக்கு, ரூ.842 என கணக்கெழுதி இருக்கின்றனர். ரூ.20 பினாயிலுக்கு ரூ.130, டிச்சு கொத்து மதிப்பு ரூ.110; ஆனால், ரூ1,010 என எழுதியுள்ளனர். ரூ.1,500 மதிப்புள்ள மோட்டாருக்கு, ரூ.25,465 எனவும், ரூ.820 விலையுள்ள லைட் பிட்டிங்கிற்கு ரூ.2,080 என, விலை குறிப்பிட்டு, ஒரு ஊராட்சியில் ஒரு கோடி ரூபாய் வரை கொள்ளையடித்துள்ளனர்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE