மதுரை:''ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் செய்திருந்ததாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நிரூபித்தால், பொது வாழ்க்கையில் இருந்து விடுபடத் தயார்,'' என, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார்.
மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தில் அரசு நலத்திட்டங்களை வழங்கி, அவர் அளித்த பேட்டி:'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகள் விரைந்து நடக்கின்றன. கொரோனா வைரஸ் காலகட்டத்தில் சில தொய்வு ஏற்பட்டது. தி.மு.க., மற்றும் அந்த கூட்டணி கட்சிகள், அவர்கள் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தனர், நாங்கள் என்ன செய்தோம் என மக்களுக்கு தெரியும்.
அ.தி.மு.க., ஆட்சியில், தங்கு, தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது. அனைத்து குடும்பங்களுக்கும், 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குகிறோம். எதிர்க்கட்சி தலைவர் வீட்டிற்கு கூட, 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ஊழல் செய்ய வாய்ப்புகள் இல்லை. யாரும் ஊழல் செய்ய முடியாது.
ஊழல் செய்கின்றனர் என, ஸ்டாலின் நிரூபித்தால் பொது வாழ்க்கையில் இருந்து விடுபடத் தயார்.சிட்னியாகவே, மதுரை மாறும் எனக் கூறியது போல, உறுதியாக மாறும். ஜீபூம்பா என்று சொன்னவுடன் மாறி விடாது. அதற்கு, அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE