புதுடில்லி:'பிரிந்து வாழும் மனைவிக்கு, ஜீவனாம்சம் வழங்க வேண்டியது கணவனின் கடமை. இந்தப் பொறுப்பை, அவர் தட்டிகழிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பெண், கணவன் மீது, சென்னை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ், 2009ல் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனைவிக்கு குடும்ப பராமரிப்பு தொகையாக, ஒட்டு மொத்தமாக இரண்டு கோடி ரூபாய் வழங்க, கணவனுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, செஷன்ஸ் நீதிமன்றத்தில் கணவன் வழக்கு தொடர்ந்தார்.மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நாளில் இருந்து, மனைவிக்கு பராமரிப்பு தொகையாக, மாதம் ஒரு லட்சம் ரூபாயும், வீட்டு வாடகையாக, மாதம், 75 ஆயிரம் ரூபாய் வழங்கவும், கணவனுக்கு, செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர் நீதிமன்றம், 2016ம் ஆண்டிலும், உச்ச நீதிமன்றம், 2017ம் ஆண்டிலும் தள்ளுபடி செய்தன.மேலும், செஷன்ஸ் நீதிமன்றம் உத்தர விட்டபடி, மாதந்தோறும், 10ம் தேதிக்குள், 1.75 லட்ச ரூபாயை மனைவிக்கு வழங்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், நிலுவையில் உள்ள பராமரிப்பு தொகையை, ஆறு மாதத்துக்குள் வழங்கவும், கணவனுக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த தொகையை கணவன் வழங்கவில்லை.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மனைவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் நடந்தது. நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:பிரிந்து வாழும் மனைவிக்கு, ஜீவனாம்சம் வழங்க வேண்டியது கணவனின் கடமை; இதை, கணவனால் தட்டிக் கழிக்க முடியாது.
இந்த வழக்கில், தன்னிடம் பணம் இல்லை என, கணவன் கூறுவதை ஏற்க முடியாது. தேசிய பாதுகாப்பு தொடர்பான பணி ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக, அவரே தெரிவித்துள்ளார்.அதனால் நீதிமன்ற உத்தரவுப்படி, நிலுவையில் உள்ள பராமரிப்பு தொகை, 2.60 கோடி ரூபாயை, நான்கு வாரத்துக்குள், கணவன் வழங்க வேண்டும்.அத்துடன், ஒவ்வொரு மாதமும், 10ம் தேதிக்குள், 1.75 லட்ச ரூபாய் வழங்க வேண்டும்; இதை செயல்படுத்தாவிட்டால், சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE