ராமேஸ்வரம்:இலங்கை, கச்சத்தீவு உள்ளிட்ட சில தீவுகளில், சீனா காற்றாலை அமைக்க உள்ளதால், இந்தியாவின் பாதுகாப்புக்கு சவால் ஏற்படும் நிலை உள்ளது.
தமிழகத்தில், கடலோர பகுதியான ராமேஸ்வரம்முதல் கோடியக்கரை வரை உள்ள மீனவர்கள்,பாக் ஜலசந்தி கடல் மற்றும் கச்சத்தீவு அருகே, பல ஆண்டுகளாக மீன் பிடிக்கின்றனர்.
ஆலோசனை
சமீபகாலமாக, இலங்கை கடற்படை தாக்குதல், கைது, படகுகள் மூழ்கடிப்பால், தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.இந்திய மீனவர்களை பாதுகாக்க, கச்சத்தீவை மீட்க அல்லது அப்பகுதியில் குத்தகை முறையில் மீன் பிடிக்கும் திட்டத்தை, மத்திய அரசு ஆலோசித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இலங்கை, சமீபகாலமாக இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது.
இலங்கைக்குள் வர்த்தகம், துறைமுகம் பராமரிப்பு துறைகளில், இந்தியா நுழைந்தால், மீண்டும் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு அல்லது சீனாவுடன் பகை ஏற்படும் என, அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம் கருதுகிறது.
ஒப்பந்தம் ரத்து
இதன் முதல் கட்டமாக, இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள திரிகோணமலை துறைமுகத்தை, இந்தியா பராமரிக்கும் ஒப்பந்தத்தை, இலங்கை ரத்து செய்தது. இரண்டாம் கட்டமாக, ராமேஸ்வரத்தில் இருந்து, 21 கி.மீ.,யில் உள்ள கச்சத்தீவு, 30 கி.மீ.,யில் உள்ள நெடுஞ்தீவு, அனலை தீவு, நயினார் தீவில், 89 கோடி ரூபாயில் காற்றாலை அமைக்க, சீனாவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அங்கு, காற்றாலை பராமரிப்பு என்ற பெயரில், சீன உளவுத்துறையும் முகாமிடும். அப்பகுதியில் இந்திய கடற்படையின் ரோந்து பணியை, சீனா கண்காணிக்க முடியும். தமிழக கடல் பகுதியில், சீனாவின் கண்காணிப்பு நிரந்தரமாகி விடும். இது குறித்து இந்திய, இலங்கை நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு பிரதிநிதி அருளானந்தம் கூறியதாவது:காற்றாலை அமைப்பதால், சீனாவுக்கு எந்த லாபமும் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால், இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த முடியும். இதுவே, சீனாவின் திட்டம்.
இந்நிலையில், 2009ல் தமிழர்களை கொன்று குவித்தது தொடர்பாக, நாளை ஐ.நா.,வில் இலங்கைக்கு எதிராக, மனித உரிமை மீறல் தீர்மானம் வர உள்ளது. இதை இந்தியா ஆதரித்து, இலங்கைக்கு பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE